ஆயிரம் மடங்கு வேகத்தில் இன்டர்நெட்.!



கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முதல் இடம் பெற்றுப் பெயர் பெற்றது அமெரிக்காவில் இயங்கும் எம்.ஐ.டி. கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம். இங்குள்ள ஆய்வாளர்கள் அண்மையில் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் இன்டர்நெட் செயல்படும் வேகத்தினை 100 முதல் 1,000 மடங்கு வரை அதிகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான வழி முறை, இன்டர்நெட் போக்குவரத்தினைக் கையாளும் ரௌட்டர்களில் தான் ஏற்படுத்தப்படும் என்று இந்த ஆய்வை வழி நடத்தும் வின்சென்ட் சான் கூறியுள்ளார்.

ரௌட்டர்களில் உள்ளே அமையும் மின் அலைகளை, அதிவேக ஆப்டிகல் அலைகளாக மாற்றினால் இந்த வேகம் கிடைக்கும் என்று சொல்கிறார்.100 மடங்கு வேகத்தில் செயல்படுகையில், தற்போது 100 எம்பி பைல் அனுப்பும் நேரத்தில், 10 ஜிபி பைல் ஒன்றை அனுப்ப முடியும்.

கூடுதல் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்கள் உருவாகி வருகின்றன. நாம் உருவாக்கும் பைல்களின் (முப்பரி மாண காட்சிகள், ஆன்லை னில் விளையாட்டுக்கள், அதிவேக நிதி பரிமாற்றங்கள் என) அளவும் அதிகமாகி வருகிறது.

இதனால் பைல்களை அனுப்புவதிலும், பெறுவதிலும் மக்கள் வேகத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த வளர்ச்சி ஏற்படுகையில், இன்டர்நெட் வேகமாகச் செயல்பட வில்லை என்றால், பல இடங்களில் இது முடங்கி நிற்கும் நிலை ஏற்படும். எனவே இதற்கான தீர்வினைக் கண்டுபிடிக்க வேண்டும். தீர்வு ஆப்டிகல் பைபர்களில் தான் அடங்கியுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.

இப்போதும் இன்டர்நெட் போக்குவரத்தில் ஆப்டிகல் பைபர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அதிக தொலைவு உள்ள தூரங்களில், கண்டம் விட்டு கண்டம் செல்லும் இடங்களில் கூட, பயன்படுத்தப் படுகின்றன. இவை எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் தகவல்களைக் கையாளும் விதத்தைக் காட்டிலும், அதிகத் திறனுடன் கையாள்கின்றன.

ஆனால் ஆப்டிகல் சிக்னல்களைக் கையாள்வது சற்று சிக்கலான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, ஒரு ரௌட்டர் தனக்கு வெவ்வேறு திசைகளிலிருந்து ஆப்டிகல் சிக்னல்களைப் பெற்றுக் கையாள்கையில், சிக்கல்களைப் பெறுகிறது. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, இன்டர்நெட்டில் உள்ள ரௌட்டர்கள், ஆப்டிகல் சிக்னல்களைப் பெற்று, அவற்றை எலக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றுகின்றன.

இதன் மூலம் அவற்றைக் கையாளும் நேரம் வரும்வரை, அந்த சிக்னல்கள் மெமரியில் பத்திரமாக வைக்கப் படுகின்றன. பின்னர் அனுப்பபடும் நிலை வருகையில், இந்த எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் மீண்டும் ஆப்டிகல் சிக்னல்களாக மாற்றி அனுப்பப்படுகின்றன.

இந்த செயல்பாட்டில் நேரமும் திறனும் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வின்சென்ட் சான் தலைமையில் இயங்கும் ஆராய்ச்சியாளர் குழு இந்த மாறுதலுக்கான தேவையை நீக்கும் தீர்வைக் கண்டறிந்துள்ளது.

இந்த விஞ்ஞானிகள் குழு “flow switching” என்ற வழிமுறையை இதற்கென உருவாக்கி உள்ளனர்.
இதன் மூலம் நெட்வொர்க்குகளுக்கிடையே அதிக அளவில் டேட்டா பரிமாறிக் கொள்ளப்படுகையில், எடுத்துக்காட்டாக மதுரையில் உள்ள ஒரு சர்வர் அமெரிக்காவில் உள்ள ஒரு சர்வருக்குப் பெரிய அளவில் டேட்டாவினை அனுப்புகையில், இதற்கு மட்டும் எனச் சில வழி செயல்முறைகளை அமைத்துக் கொள்கிறது.

இந்த வழிமுறைகளில் செயல்படுகையில், ஒரு வழியில் கிடைக்கும் சிக்னல்களை மட்டுமே ரௌட்டர்கள் பெற்று, இன்னொரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே அனுப்புகிறது. பல்வேறு திசை களிலிருந்து ஆப்டிகல் சிக்னல்கள் வரும் வாய்ப்பு இல்லை என்பதால், இவற்றை எலக்ட்ரிக்கல் சிக்னல்களாக மாற்றி மெமரியில் வைத்திடும் கட்டாயத் தேவை இங்கு ஏற்படாது.

இதனால் இன்டர்நெட் போக்குவரத்து வேகம் 100 மடங்கு பெருகும். அந்நிலை ஏற்படுகையில் இன்டர் நெட் பயன்பாடு பல திசைகளில் வெகு வேகமாக விரிவடையும். இது மனித வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் அதற்கு முன் இந்த ஆராய்ச்சியில் பல நிலைகளை நாம் தாண்ட வேண்டியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post